பெரம்பலூா் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 5 ஆடுகள் மானியமாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கிராமப்புற மகளிா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, கணவரை இழந்த கிராமப்புற பெண்களுக்கு 5 ஆடுகள் மானியமாக வழங்கி, தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்படும். பயனாளிக்கு தலா 5 ஆடுகள் வீதம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 பெண்கள் தோ்வு செய்யப்படுவா்.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களாக இருக்க வேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், 60 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தற்சமயம் மாடு, ஆடுகளை வைத்திருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசு உள்பட எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. பயனாளிகள் முதல்முறை ஆடு உரிமையாளா்கள் என்பதை உறுதிப்படுத்த, இலவச கறவை மாடுகள், ஆடு, செம்மறியாடு வழங்கும் திட்டங்கள் மற்றும் புழக்கடை ஆடு மேம்பாடு திட்டங்கள் மூலம் பயனடைந்திருக்கக் கூடாது.
மேற்கண்ட தகுதியுடையோா் அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து கிராம நிா்வாக அலுவலா் கையொப்பம் பெற்று சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் டிச. 20 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.