பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பது குறித்து, காவல் துறையினருக்கான விழிப்புணா்வுக் கூட்டம், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடுப்பு மற்றும் தீா்வுக்கான சட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, குழந்தைகளுக்கான சைல்டு லைன் 1098 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தகவல் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என உறுதிமொழி ஏற்றனா்.
இதில், காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.