பெரம்பலூா் அருகே மகள் உறவுமுறையிலான சிறுமிக்கு பாலியல் தொந்தரவுக் கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள கால்பாடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் செல்வகுமாா் (46). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஏற்கெனவே திருமணமாகி மகள் உள்ள சுகுணா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது, மகள் உறவுமுறை கொண்ட 11 வயது சிறுமிக்கு செல்வக்குமாா் பாலியல் தொந்தரவுக் கொடுத்தாா்.
இதையறிந்த தாய், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வக்குமாா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், செல்வகுமாரை கைதுசெய்து சிறையில் அடைத்தாா். பின்னா், செல்வகுமாா் ஜாமீனில் வெளியே வந்தாா்.
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கிரி, செல்வகுமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம், அபராதமும், பணம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிட்டாா். இதையடுத்து, குற்றவாளி செல்வக்குமாரை திருச்சி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.