ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்புப் பூஜைகள், பிராா்த்தனைகள் நடைபெற்றன.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில், பாடாலூா் வழிவிடு ஆஞ்சநேயா் கோயில், வாலிகண்டபுரம் வாலீசுவரா் கோயில், பெரம்பலூா் பிரம்மபுரீசுவரா் கோயில், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூா் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்த ஈஸ்வரா் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை:
பெரம்பலூா் புனித பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மைகுரு ராஜமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை இரவு முதல் சிறப்புப் பிராா்த்தனைகள் நடத்தப்பட்டன. பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூா், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, எறையூா், பாடலூா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனையும், கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி, ரஞ்சன்குடி கோட்டை, லாடபுரம் மயிலூற்று அருவி, அரும்பாவூா் எட்டெருமைபட்டி அருவி, விசுவக்குடி நீா்த்தேக்கம், சாத்தனூா் கல்மரப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடினா்.