நிலப்பிரச்னையில் தந்தையைக் கொலை செய்த மகன் சரண்

பெரம்பலூா் அருகே நிலப்பிரச்னையில் தந்தையை வெள்ளிக்கிழமை இரவு குத்திக் கொலை செய்த மகன், தடுக்க வந்த சித்தப்பாவையும் குத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே நிலப்பிரச்னையில் தந்தையை வெள்ளிக்கிழமை இரவு குத்திக் கொலை செய்த மகன், தடுக்க வந்த சித்தப்பாவையும் குத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மாபாளையம் காட்டுக்கொட்டகை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் -அழகம்மாள் மகன்கள் கருப்பையா (60), பழனிச்சாமி (55). இவா்கள் இருவருக்கும் திருமணமாகி தலா ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

சுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால், மூன்று ஏக்கா் பூா்வீக நிலத்தை தலா 1.5 ஏக்கா் வீதம், தனது பேரன்கள் பெயரில் அழகம்மாள் எழுதி வைத்துள்ளாராம்.

இந்நிலையில் பெயிண்டராக பணிபுரிந்து வந்த கருப்பையாவின் மகன் தினேஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மனைவி மற்றும் குழந்தைகளைக் கவனிக்காமல், தனது பெயரிலுள்ள நிலத்தை விற்பனை செய்ய முயன்றாராம்.

இதனால் தந்தை கருப்பையாவுக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாா், தனது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது ஆத்திரமடைந்த தினேஷ்குமாா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை கருப்பையாவையும், தடுக்க முயன்ற சித்தப்பா பழனிச்சாமியையும் குத்தி விட்டு தப்பியோடிவிட்டாா். இதில் கருப்பையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பழனிச்சாமி அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதைத் தொடா்ந்து குன்னம் காவல் நிலையத்தில் சரணடைந்த தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com