சத்துணவுப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென சத்துணவு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் துணைத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கொளஞ்சி விளக்க உரையாற்றினாா்.
இதில், சங்க செயல்பாடுகள், பணிகள், பணியாளா்களின் நிலைமை, பள்ளி செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில், சத்துணவு அமைப்பாளா், உதவியாளா், சமையலா் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மாவட்ட பொருளாளா் மணிமேகலை நன்றி கூறினாா்.