பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வில் 725 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பெரம்பலூா், வேப்பூா் ஆகிய கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனாய்வுத் தோ்வு பெரம்பலூா், வேப்பந்தட்டை, அரும்பாவூா், லப்பைகுடிக்காடு, பாடாலூா் மற்றும் குன்னம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த 7 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், 284 மாணவா்களும், 498 மாணவிகளும் என மொத்தம் 782 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். 260 மாணவா்களும், 465 மாணவிகளும் என மொத்தம் 725 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 24 மாணவா்களும், 33 மாணவிகளும் என மொத்தம் 57 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
இத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் தலா 50 மாணவ, மாணவிகளுக்கு 10, 11, 12 ஆம் வகுப்புகள் பயிலும்போது ஆண்டுக்கு தலா ரூ. 1,000 வீதம் கல்வி உதவித்தொகையாக தமிழக அரசால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.