பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) சட்ட விதிமுறைகளை மீறி டிராக்டா் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தினால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, குடியரசு தினத்தன்று டிராக்டா் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, எவ்வித பேரணிகளையும் பெரம்பலூா் மாவட்டத்தில் நடத்த அனுமதி கிடையாது.
கரோனா பரவலை கருத்தில்கொண்டு மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வகையில் பேரணி நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீறி பேரணி நடத்தினால், மோட்டாா் வாகனச் சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.