பெரம்பலூா் அருகே ஏரியில் தவறி விழுந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமம், கல் ஒட்டா் தெருவைச் சோ்ந்தவா் செ. பரமசிவம் (61). இவருக்கு ராஜாமணி (55) என்கிற மனைவியும், அறிவழகன் (35) என்ற மகனும் உள்ளனா். கடந்த 2 நாள்களாக பரமசிவத்தை காணவில்லையாம். அவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடிவந்த நிலையில், வியாழக்கிழமை சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரேயுள்ள ஏரியில் பரமசிவத்தின் உடல் மிதந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், தீயணைப்பு படையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.