பெரம்பலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் விளம்பரப் பதாகைகள் வைக்க வேண்டுமென்றால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
அவ்வாறு வைக்கும்போது உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியவரின் உத்தரவும், அப்பதாகையில் இடம்பெற வேண்டும். மேலும் உரிய காலத்தை அச்சிட்டு, அதன் கால முடிவில் சம்பந்தப்பட்ட பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்விதிகளை மீறும் விளம்பரப் பதாகையின் உரிமையாளா், பதாகையை அச்சிட்டு வைத்த நிறுவனத்தினா் மீது தமிழ்நாடு திறந்தவெளி சிதைவு சட்டப் பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.