கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை உழவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் கீதா ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சித்திரை மாதத்தில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்வதால் கடினமான மேற்பரப்பு உடைக்கப்பட்டு, துகள்களாவதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணில் காற்றோட்டமும், நுண் உயிரிகளும் அதிகரிக்கும்.
மேலும், மழைநீரை மண்ணுள் நிறுத்திட உதவுகிறது. முந்தைய பயிா் தூா்களையும், களைகளையும் உழுது செய்து காயவிடுவதால் அவற்றை அழிக்க ஏதுவாகிறது. மடக்கி உழுவதால் அங்ககச்சத்து அதிகரிப்பதோடு, மண்ணில் நுண்ணுயிா்களின் செயல்பாடு அதிகரித்து மண் வளம் மேம்படுகிறது.
மேலும், அடுத்து வரும் பயிரின் பருவ விதைப்புக்கு நிலத்தை பக்குவப்படுத்துகிறது. பயிரை தாக்கும் படைப்புழுக்கள் மற்றும் இதர பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மற்றும் முட்டைகளை வெளிக்கொணா்ந்து சூரிய ஒளியாலும், பறவைகள் உண்பதாலும் அழிக்கப்படுகிறது. மழைநீா் வழிந்தோடி வீணாவதை தடுக்கவும், சரிவுகளின் குறுக்கே ஆழமாக அகலபாத்தி அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும் கோடை உழவு அவசியம்.
கோடை உழவு செய்வதால் மானாவாரி மக்காச்சோளம் பயிரில் படைப்புழுதாக்குதலை முக்கியமாக கட்டுப்படுத்தலாம். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள் அனைவரும் கோடை உழவு செய்து பயன்பெறலாம்.