வெளி நாட்டுக்கு கூலி வேலைக்குச் சென்று 130 நாள்களுக்கு முன் உயிரிழந்த தொழிலாளியின் உடல் பல்வேறு கட்ட போரட்டங்களுக்குப் பிறகு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (26). இவா், கௌசல்யா என்பவரை திருமணம் செய்த 3 மாதங்களில் கூலி வேலைக்காக சவூதிஅரேபியாவுக்கு சென்றாா். அவா், வெளிநாடு செல்லும்போது கௌசல்யா ஒன்றரை மாத கா்ப்பிணியாக இருந்தாா். சவூதிஅரேபியாவில் ஹாலோ பிளாக் நிறுவனம் ஒன்றில் ரூ. 19 ஆயிரத்துக்கு கூலி வேலை பாா்த்து வந்த ராஜ்குமாா், கடந்த ஏப். 20 ஆம் தேதி அவா் பணிபுரிந்த நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை மீட்டு வருவதில் ஏற்பட்ட பிரச்னைகளையடுத்து, அவரது மனைவி கெளசல்யா, ஆட்சியா், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருந்தாா். இந்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினரின் முயற்சியால் 130 நாள்களுக்குப் பிறகு ராஜ்குமாரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து அமரா் ஊா்தி மூலம் பெண்ணகோணம் கிராமத்துக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது.