வழக்குரைஞா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தொடா்ந்து வழக்குரைஞா்கள் மீது ரௌடிகள், சமூக விரோதிகள் தாக்குதல் சம்பவங்கள் நடத்தி வருவதைக் கண்டித்தும், ஒரு சில காவல் துறையினா் வழக்குரைஞா்கள் மீது காழ்ப்புணா்வுடன் செயல்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் பெரம்பலூா் மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஒரு நாள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் பாா் அசோசியேசன் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள், சங்க உறுப்பினா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் வழக்காடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.