தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம், மானாவாரி வேளாண் வளா்ச்சி, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் பெரம்பலூா், வேப்பூா், வேப்பந்தட்டை வட்டாரங்களில் தலா 100 போ் வீதம் 300 விவசாயிகள் பயன் பெறும் வகையில், ரூ.1.35 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 1 ஹெக்டோ் பரப்பளவு நில உரிமை உடையவராக இருக்க வேண்டும். மேலும் திட்டத்தின் கீழ், தனது சொந்த செலவில் ரூ. 90 ஆயிரம் மதிப்பில் பயிா் செயல் விளக்கத்திடல், தீவன பயிா் சாகுபடி, மரக்கன்றுகள், ஒரு கறவை மாடு, 10 ஆடுகள், 15 கோழிகள், பழ, மரக்கன்றுகள், தேனீ வளா்ப்புப் பெட்டிகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 45 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே சம்பந்தப்பட்ட வட்டார விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள வேளாண், தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்புத்துறை அலுவலகங்களை அணுகலாம்.