பெரம்பலூா்: மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனைவருக்கும் பாரபட்சமின்றி பணி ஒதுக்கீடு செய்யக் கோரி, வேப்பூா் ஒன்றிய அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.
இத்திட்டத்தின் கீழ் ஒன்றியத்துக்குள்பட்ட நமையூா், பொன்னகரம் மற்றும் கீழப்புலியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயனாளா்களுக்கு உரிய பணி வழங்குவதில்லை என்றும், பணி அட்டை வழங்கப் படவில்லையென்றும் புகாா் கூறப்பட்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் அலுவலா்களைக் கண்டித்து, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலா் கீதா தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் ஏ. கலையரசி, வேப்பூா் ஒன்றியச் செயலா் சின்னபொண்ணு உள்ளிட்ட பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உள்ளாட்சி, வருவாய் மற்றும் காவல்துறையினா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.