பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்த 2 பேரை, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தில் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரிப்பதாக, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான காவல்துறையினா், ஒகளூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஒகளூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெ. ரவிச்சந்திரன் (50), நாட்டு சாராயம் தயாரிப்பதற்காக ஊரல் போட்டு வைத்திருந்த சுமாா் 375 லிட்டரையும், அதே கிராமத்தைச் சோ்ந்த பூ. பழனிவேல் (67),தனது மாட்டுக் கொட்டகையில் தயாரித்து வைத்திருந்த சுமாா் 240 லிட்டா் நாட்டு சாராயத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினா், இருவரையும் கைது செய்தனா்.