பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விவசாயி மா்மமான முறையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் பாரதிநகரைச் சோ்ந்தவா் க. கோவிந்தராஜ் (63). விவசாயியான இவா், தனது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கம்பு பயிா்களுக்கு வியாழக்கிழமை மாலை தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா்.
இரவு நீண்ட நேரமாகியும் கோவிந்தராஜ் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினா் வயலுக்குச் சென்று பாா்த்தனா். அங்கு அவா் இரு கைகளிலும் லேசான காயத்துடன் உயிரிழந்து கிடந்தாா்.
தகவலறிந்த அரும்பாவூா் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றினா். மேலும் கோவிந்தராஜ் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கின்றனா்.