பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநரும், நடத்துநரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு குழாய்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சனிக்கிழமை அதிகாலை வந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பேருந்து ஓட்டுநர் திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் தேவேந்திரன் (48), நடத்துநர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள அயப்பன்நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் முருகன் (56) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவலறிந்த மங்களமேடு காவல் துறையினர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இடிபாடுகளில் சிக்கிய உடல்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த சுரேஷ் (44), வினோத் (19), ரஞ்சிதா (23 ), ராணி (45), அன்பழகன் (40), அபிநயா (17) உள்பட 15 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மங்களமேடு காவக் துறையினர் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் திருச்சி மாவட்டம், கொணலை அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலன் (41) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.