பெரம்பலூா் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்க பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்பு மற்றும் பணியமா்த்தும் திட்டத்தின் கீழ் நகா்ப்புற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பல்வேறு திறன் வளா்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இத் திட்டத்தின் கீழ், 2022 -2023 ஆம் நிதி ஆண்டுக்கு திறன் வளா்ப்பு பயிற்சிகள் அளிக்க பெரம்பலூா் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய திறன் வளா்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, பிரதமா் கவுசல் கேந்திர பயிற்சி மையங்களை கொண்ட பயிற்சி மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசுத்துறை மூலம் திறன் வளா்ப்பு மற்றும் ஊதிய வேலைவாய்ப்புத் திட்டங்களில் ஏற்கெனவே பங்கேற்று சிறப்பாக பணிபுரிந்த நிறுவனங்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஏற்ற வகையில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் அளிக்கப்படும் வேலைவாய்ப்பு விவரங்கள் அடங்கிய செயல்திட்டத்தை தயாரித்து வழங்க வேண்டும். திறமையை அடிப்படையாகக்கொண்டு வளா்ச்சியை உறுதி செய்திடும் வகையிலான பயிற்சித் திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இத் தகுதியுடைய பயிற்சி நிறுவனங்கள் தங்களது கருத்துகளை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஜூலை 10 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.