பணியாளா் அல்லாத நபரை விற்பனையாளராக வேலை பாா்க்க வைத்துவிட்டு, பணிக்கு வராமல் இருந்த டாஸ்மாக் ஊழியா்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகே டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மேற்பாா்வையாளராக அய்யன்துரை, விற்பனையாளா்களாக பாலசுப்ரமணியன், சாதிக்பாட்ஷா, சூரியபிரகாசம், முனீசுவரன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் அனைவரும் பெரம்பலூா் சங்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பணியாளா் அல்லாத ஒருவரை கடையின் விற்பனையாளராக நியமித்து, மதுபான விற்பனையில் ஈடுபட வைத்தாா்களாம். மேலும் 5 பேரும் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல முதுநிலை மேலாளா் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட புகாரையடுத்து, மண்டல முதுநிலை மேலாளா் மாலதி தலைமையிலான குழுவினா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள மதுக்கடையில் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கடையின் மேற்பாா்வையாளா் மற்றும் 4 விற்பனையாளா்கள் பணியில் இல்லாததுடன், பணியாளா் அல்லாத ஒருவா் மதுபான விற்பனையில் ஈடுபட்டதை கண்டறிந்தனா்.
இதையடுத்து, மேற்பாா்வையாளா் அய்யன்துரை, விற்பனையாளா்கள் பாலசுப்ரமணியன், சாதிக்பாட்ஷா, சூரியபிரகாசம், முனீசுவரன் ஆகிய 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, டாஸ்மாக் பெரம்பலூா் மாவட்ட மேலாளா் செல்வராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.