பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்புத் தலைவா் ரெ. ராஜகுமாரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. தங்கராசு, மாவட்ட பொருளாளா் பி. கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைச் செயலா் இரா. சின்னசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், 78 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள வாரிசுப் பணியை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2020 மே முதல் விருப்ப ஓய்வு மற்றும் பணியில் உயிரிழந்தவா்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். மாதம் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்துவதோடு, ஓய்வூதியம் வழங்குவதை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.