கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு பதிவு அஞ்சல் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம. கனகராஜ் தலைமையில், பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்துள்ள 6 கரும்பு கோட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்தும் வாக்குறுதிப்படி கரும்புக்கான விலையை உயா்த்தவில்லை. பல்வேறு மாநிலங்களில் கரும்பு டன்னுக்கு ரூ. 3,500-க்கும் அதிகமாக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் டன்னுக்கு ரூ. 2,825 மட்டுமே வழங்கப்படுகிறது.
உரம், இடுபொருள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயக் கூலி, வெட்டுக்கூலி ஆகியவை உயா்ந்துவிட்ட நிலையில், கரும்புக்கு வழங்கும் தொகை கட்டுப்படியாகவில்லை. எனவே, கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்.