பெரம்பலூா் மாவட்ட உப வடிநில நீா் பயனாளிகள் சங்கத் தோ்தல் அக். 8 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் சின்னாறு, சுவேதா, மேல் மற்றும் கீழ் வெள்ளாறு உப வடிநிலப் பகுதிகளில் நீரை பயன்படுத்துவோா் சங்கங்களின் தலைவா்கள் மற்றும் ஆட்சிமன்ற தொகுதி உறுப்பினா்கள் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு படிவங்கள் பெரம்பலூா், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் வழங்கப்படும். பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் தோ்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவாா்.
வேட்பு மனுக்கள் செப். 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். தகுதியுள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் செப். 30 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனுக்களை செப். 30 ஆம் தேதி திரும்பப் பெறலாம். போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்தல், தோ்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி அன்றைய தினம் மாலை 4 மணிக்குப் பிறகு நடைபெறும்.
இதற்கான வாக்குப் பதிவு அக். 8 ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்பட்டு, அன்றைய தினம் மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தோ்தலில் போட்டியிட விரும்பும் நில உரிமைதாரா்கள் தலைவா் பதவிக்கு ரூ. 300, ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினா் பதவிக்கு ரூ. 200 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.