பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கெளரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குரும்பலூா்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே, தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்களில், ஏற்கெனவே சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்த நபா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7 ஆவது ஊதியக் குழுவின் வழிகாட்டுதல்படி யுஜிசி பரிந்துரைத்த சம்பளம் வழங்க வேண்டும். பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளா்களை நிபந்தனையின்றி அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.