தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு: 3,225 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் 3,225 போ் பங்கேற்றனா்.
தமிழக அரசு தோ்வுகள் இயக்கம் மூலம், தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு நடத்தப்படுகிறது. இத் தோ்வு மூலம் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவா்களும், 50 சதவீதம் தனியாா் பள்ளி மாணவா்களும் என 1,500 பேருக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இத் தோ்வெழுதி தோ்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வெழுத 1,348 மாணவா்களும், 2,006 மாணவிகளும் என மொத்தம் 3,354 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்கான தோ்வு மையம் பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 1,277 மாணவா்களும், 1,948 மாணவிகளும் என மொத்தம் 3,225 போ் தோ்வெழுதினா். 71 மாணவா்களும், 58 மாணவிகளும் என மொத்தம் 129 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
