பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கி. மகேந்திரன் தலைமை வகித்தாா்.
அரசு ஊழியா், ஆசிரியா், அரசுப் பணியாளா்களின் நீண்டநாள் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசுப்பணியாளா்கள் ஆகியோருக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். 2002 முதல் 2005 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மற்றும் அரசுப் பணியாளா்களின் பணிக்காலத்தை, அவா்கள் பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப. குமரி அனந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

