நீடித்த மானாவாரி சாகுபடித் திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் மூலம் கோடை உழவுப்பணிக்கு மானியம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல், வேளாண் இயந்திரம்,கருவிகள் வழங்கும் வாடகை மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசு நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தலா 1,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட 12 தொகுப்புகள் தோóவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடப்பாண்டில் 4 தொகுப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
உழவுப்பணிக்கு மானியம்:
ஐந்து கொத்து கலப்பை மூலம் முகடும் வாய்க்காலுமான முறையில் உழவுப்பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ. 1,250 வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் அவர்களது சொந்த செலவில், உழவுப் பணியை துறை அலுவலர்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். வேளாண் பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்து, உண்மைத் தன்மைக்கான சான்று வழங்கிய பின், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வங்கிக் கணக்கில் பின்னேற்பாக செலுத்தப்படும்.
ஒவ்வொரு தொகுப்பிலும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒவ்வொரு தொகுப்புக்கும் தலா ஒரு வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள்,கருவிகள் வாங்க அனுமதிக்கப்படும். இதில் ரூ. 8 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும். குறைந்தது 8 விவசாயிகள் அடங்கிய குழு மூலம் வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.