மக்காச்சோளம், எண்ணை வித்துக்கள் போன்ற மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் அக்கூட்டியக்கத்தின் மாவட்ட அவைத்தலைவர் சைவராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறிய பிறகும் விலக்கு அளிக்காமல் ஏமாற்றியதற்கு கண்டனம் தெரிவிப்பது.
கடந்த 2016 -ஆம் ஆண்டு நெல் பயிரிட்டவர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சில இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை . மக்காச்சோளம், எண்ணை வித்துக்கள் போன்ற பயிர்களை பயிரிட்டு நஷ்டம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வேளாண் விற்பனை மையங்களில் மானிய விலையில் விற்கும் விதைநெல் மற்றும் இடு பொருட்கள் வாங்கும் விவசாயிகளிடம் ரசீது கொடுப்பதில்லை. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கைக்கு எதிரான தைல மரங்களை நடுவதை தவிர்த்து விட்டு இயற்கைக்கு உகந்த மரங்களை நட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் நடராஜன், கீரனூர் நகரச் செயலர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.