புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் பயனாளிகள் 43 பேருக்கு ரூ.5.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில், விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, பசுமைவீடு, சாலை, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 380 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் விருப்புரிமை நிதியின் கீழ் சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பொன்னமராவதி வட்டத்தைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு இயற்கை மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.1.80 லட்சம், 13 பேருக்கு திருமண நிதியுதவியாக ரூ.1.06 லட்சம், மாற்றுத் திறனாளிக்கான ஆணை ஒருவருக்கும், தாட்கோ திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மானிய விலையில் ரூ.1,99,357 மதிப்பில் சரக்குந்து வாகனம், வேளாண் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகள், பணியின்போது மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணை என 43 பேருக்கு ரூ.5,35,357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.