இலுப்பூர் கல்வி மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள மண்ணவேளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டாய்வின் போது மாணவர்களுக்கு பாடம் நடத்தினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். வனஜா.
ஆய்வின்போது திடீரென 6- ம் வகுப்பு அறைக்குள் சென்று அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம் நடத்தினார். இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு உற்சாகப்படுத்தினார். மாணவர்களும் ஆர்வமாகப் பதில் அளித்தனர். இதைக் கண்டு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
பின்னர் அவர் பாடம் நடத்தும் முறை, அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டுச் சென்றார்.
இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் க. குணசேகரன், பள்ளி துணைஆய்வாளர் கி. வேலுச்சாமி, மருதாந்தலை பள்ளித் தலைமையாசிரியர் பாரதி விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன், மாங்குடி தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.