ஆலங்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆலங்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அருகே குளமங்களத்தைச் சேர்ந்த சித்திரைவேலு மகள் கஸ்தூரி(19), கடந்த அக்.28ஆம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிரான்விடுதியைச் சேர்ந்த நாகராஜை(27) போலீஸார் கைது செய்தனர். மேலும், சடலத்தை மறைக்க உதவியதாக அவரது உறவினர் போதுமணி(47) கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்வதுடன், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஸ்டெல்லா தலைமையில் அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாநிலச் செயலர் தமிழ்செல்வி, மாவட்டத் தலைவர் டி.சலோமி உள்பட திரளான பெண்கள் பங்கேற்றனர்.