கந்தர்வகோட்டை அருகே ஊருக்குள் கூட்டுறவு நியாய விலைக்கடை கட்டக் கோரி கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சபேட்டை கிராமத்தில் கிராம கூட்டுறவு வங்கி அருகே தற்போது கூட்டுறவு நியாயவிலைக் கடை உள்ள நிலையில் புதிய கூட்டுறவு நியாயவிலை கடை கட்ட அரசு நிதி ஒதுக்கி கிராமத்திலிருந்து வெகுதொலைவில் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த மஞ்சப்பேட்டை கிராம பொதுமக்கள் கந்தர்வகோட்டை வட்டாட்சியர், வட்டவழங்கல் அலுவலர்களிடம் தங்களுக்கு வசதியாக பழைய கடையின் அருகிலேயே கட்டடம் கட்டக் கோரியும் பயனில்லை. புதிய இடத்திலேயே பணிகள் நடந்தன.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கந்தர்வகோட்டை துணை வட்டாச்சியர் வி. ராமசாமி , வட்டவழங்கல் அலுவலர் செல்வகணபதி , மஞ்சபேட்டை விஏஓ த. கருப்பையா , காவல் உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 2 நாட்களில் சமாதானக் கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.