தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் பெருகிவிட்டன என்றார் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் முருகேசன், தர்ம. தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கட்சியின் சஞ்சய்தத் மேலும் பேசியது:கடந்த மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் குட்கா ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரே கூறுகிறார். தமிழகத்தில் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்கிற அளவிற்கு முறைகேடான ஆட்சியாக அதிமுக அரசு மாறி உள்ளது.
தமிழகத்தில் முதல்வரையும், துணை முதல்வரையும் தனது ரிமோட் மூலம் பிரதமர் மோடி இயக்கி வருகிறார். தமிழக மக்களுக்கான திட்டங்களை குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பிரதமர் கொண்டு சென்றுள்ளார்.
மக்களின் பணத்தை கார்பரேட் பெரு நிறுவன முதலாளிகளிடம் கொடுத்து, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு அதை சமாளிக்க மக்களிடம் மேலும் வரியை சுமத்துகிறார் பிரதமர்.
பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக பாஜக இருக்கும் எனக் கூறிவிட்டு, அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களே பெண்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்.
வரும் தேர்தலை ஜனநாயக முறையில் எதிர்கொண்டு 40 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார் அவர். மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள் பெத்தையா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.