விராலிமலை அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேரை விராலிமலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள கல்குடி மற்றும் கோமங்கலம் பகுதிகளில் அனுமதியின்றி கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விராலிமலை காவல் துணை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோமங்கலத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பெருமாள்(55) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெக்கையன் மகன் குமார் (46) ஆகிய இருவரும் அவர்களின் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதைக் கண்ட போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல் கல்குடியைச் சேர்ந்த துரைச்சாமி மகன் ஐயப்பன் (43) என்பவர் அவரது வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பதைக் கண்டறிந்த போலீஸார் அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடம் இருந்து தலா 5 பாட்டில்கள் வீதம் மொத்தம் 15 மதுபாட்டில்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.