விராலிமலை அருகே அரசு அனுமதியின்றி மதுவை விற்ற 3 பேரை விராலிமலை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள புதுப்பாட்டி பிரிவு, அருண் கார்டன் பகுதிகளில் அரசு மதுபாட்டில்களைப் பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் காவல் துணை ஆய்வாளர் சுமையாபானு தலைமையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருண் கார்டன் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பூர் மேலபட்டியைச் சேர்ந்த மலையாண்டி மகன் முருகேசன்(35), விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே தேநீர் கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சுப்பையா மகன் சண்முகம் (53), புதுபட்டி பிரிவில் வீட்டில் மதுவைப் பதுக்கி விற்ற பூமாலை மகன் சுப்பிரமணி(57) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.