அன்னவாசல் வட்டார வளமையம் சார்பில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் போட்டி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் அன்னவாசல் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. போட்டியை தொடங்கி வைத்து அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பெ.துரையரசன் பேசியது: திறந்த வெளியில் மலம் கழிப்பதால் குழந்தைகளின் உடல் மற்றும், மன வளர்ச்சியில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதுடன், குடற்புழு உருவாக்கமும் அதனால் ரத்த சோகை ஏற்படுகின்றன.
மோசமான சுகாதாரத்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளிக் குழந்தைகளிடையே சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்களாகிய நீங்கள் வீட்டில் தனிக்கழிப்பறை இல்லை எனில் பெற்றோர்களிடம் தனிநபர் கழிவறை கட்டவும், பயன்படுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்றார். முன்னதாக பள்ளி அளவில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.