விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரையைச் சேர்ந்த வர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மாலைப்பட்டியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் மகன் முகமது ஜியாவுதின் (40). தொழிலாளியான இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் டெம்போ வேனில் சென்னை, நாகை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், விராலிமலை - மதுரை தேசிய நெடுசாலை மாதிரிபட்டி பிரிவு அருகே தேநீர் குடிப்பதற்காக வேனை எதிர்ப்புறம் நிறுத்தியுள்ளனர். பின்னர் மீண்டும் வேனுக்கு திரும்பிச் செல்ல சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் முகமது ஜியாவுதின் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.