புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் திருச்சி தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி, மட்டங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சங்கம் விடுதி, கந்தம்பட்டி, நெப்புகை, வேலாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து, பொதுமக்கள் மத்தியில் மேலும் அவர் பேசியது: தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை. மக்களும் பயன்பெறவில்லை. என்னை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து உறுப்பினராக்கினால், அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள், பள்ளிக்கூடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்.
மேலும், கந்தர்வகோட்டையை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பாடுபடுவேன். காவிரி உபரிநீரை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பிவிடுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்தர்வகோட்டை பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் சாருபாலா. பிரசாரத்தில் அமமுகவினர், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.