புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் சீட்டுடன், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 வகையான அடையாளஅட்டைகளைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு அவர்களின் வாக்குச்சாவடி பெயர், எண், தொகுதி எண், , பாகம் எண், ஆகியவற்றுடன் வாக்காளர் பெயர், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு நேரடியாக வழங்கப்படும்.
இந்த வாக்காளர் சீட்டு வெறும் வழிகாட்டியாகத்தான் பயன்படுத்த முடியும். அத்துடன், தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுப் பணியாளர்களின் அடையாள
அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவேட்டின்படி வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பான் அட்டை, நூறுநாள்வேலைத் திட்ட
அட்டை, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியர் ஆணை, எம்எல்ஏ- எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைக் கொண்டு வாக்களிக்கலாம்.