புதுக்கோட்டை நகரம் மற்றும் கீரனூர் பகுதிகளுக்கு தடையில்லா காவிரிக் குடிநீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான்.
கீரனூர் பேரூராட்சிக்குள்பட்ட கடைவீதி, காந்தி சிலை, தேரடி உள்ளிட்ட 15 வார்டுகளிலும், மாலையில் புதுக்கோட்டை நகரின் பல்வேறு இடங்களிலும் வாக்கு சேகரித்த சாருபாலா ஆர். தொண்டைமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.
அப்போது கீரனூர்,புதுக்கோட்டை நகர்ப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தடையில்லா காவிரிக்குடிநீர் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். மக்களவைத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
அவருடன், அமமுக பிரமுகர்கள் குளத்தூர் பிரபாகரன், மங்கதேவன்பட்டி சுப்பிரமணி, அண்ணாதுரை உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.