ஆலங்குடி அருகே சொத்துப் பிரச்னையில் சகோதரர்களுக்கு இடையே திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில், இரு பெண்கள்உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஆலங்குடி அருகிலுள்ள புள்ளாண்விடுதியைச் சேர்ந்தவர் சேதுராஜன். இவரது மகன்கள் மணிகண்டன்(44), குபேந்திரன்(37). இருவருக்கும், அவரது தந்தை சேதுராஜன் சொத்தைப் பிரித்துத் தரவில்லையாம். இதனால், இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மணிகண்டன், குபேந்திரன் மனைவிகளுக்கிடையே திங்கள்கிழமை காலை தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மோதலாக மாறி, இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் கட்டை, அரிவாளால் தாக்கிக் கொண்டனர்.
இதில், மணிகண்டன், அவரது மனைவி ஜெயா(35), குபேந்திரன், அவரது மனைவி சுமதி (27) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 4 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்த மணிகண்டன் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.