கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியா வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல்ரகுமான்.
அறந்தாங்கியில் திங்கள்
கிழமை தொடங்கிய நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்து வந்த வணிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டது.
நாடு முழுவதும் மகளிர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்கின்றன. விவசாயம் முற்றிலும் நலிவடைந்து விவசாயிகள் தற்கொலை அதிகரிக்க மோடி காரணமாகிவிட்டார்.
ஊழல் இல்லை என்று கூறியவர்களின் ஆட்சியில், ரஃபேல் ஊழல் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது இந்தியா என்றார் அப்துல் ரகுமான்.
பயிற்சி தொடக்க விழாவுக்கு, அமைப்பின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் பதுர்ரஹ்மான், மாவட்டத் துணைத் தலைவர் முகம்மது மீரான், துணைச் செயலர்கள் ஹாரிஸ் முகமது பீர்முஹம்மது, ரபீக் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் துணைத் தலைவர் அப்துல்ரஹ்மான், மாநிலப் பேச்சாளர்கள் அப்துல் நாஸிர், சபீர் அலி, ஒலிமுகம்மது , ரஹமத்துல்லா உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்குப் பயிற்சி வழங்கினர். நிறைவில் மாவட்டச் செயலர் அப்துல்குத்தூஸ் நன்றி கூறினார்.