அறந்தாங்கி அருகிலுள்ள இடையன்கோ ட்டை அருள்மிகு அய்யனார் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் மழை வளம், மக்கள் நலன் வேண்டி, குதிரை எடுப்பு என்னும் புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பெண்கள் தங்கள் உடல் நலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் விரைவில் கைகூட வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும் மண்ணால் செய்யப்பட்டு பலவர்ணம் பூசப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மதளை(குழந்தை) சிலைகளை தலையில் சுமந்தபடி பெண்கள் கோயிலுக்கு எடுத்துவந்தனர்.
மேலும் மழைவளம் வேண்டி நடைபெற்ற திருவிழாவில், 6 அடி உயர 16 குதிரை மற்றும் காளை சிலைகளைத் திட்டக்குடி வேளாளர் தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு ஊர்வலமாக எடுத்துச்சென்று கோயிலின் முன்பு இறக்கி வைத்தனர். முன்னதாக குதிரைகளுக்கு கண்திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொன்னமராவதி அடைக்கலம் காத்தார் அய்யனார் கோயிலில்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள தேனூர் அடைக்கலம்காத்தார் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி செம்பூதியில் குதிரை மற்றும் பரிவார தெய்வச்சிலைகள் வடிவமைக்கப்பட்டு, அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை தேனூருக்கு பொதுமக்கள் சுமந்து சென்றனர்.
ஊரின் மையப்பகுதியில் சிலைகள் வைத்து, அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அங்கிருந்து திங்கள்கிழமை காலை அடைக்கலம் காத்தார் அய்யனார் கோயிலுக்குச் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தேனூர் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் புரவி எடுப்பு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதையொட்டி கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.