புதுக்கோட்டை: ஊரகப் பகுதிகளில் தனிப்பட்ட முறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வரும் ஊரக கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்த மாநில அளவில் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச் சேர்ந்த தகுதியானோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு ஏதுமில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்பாகவும், ஏதாவது ஒரு அறிவியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு பயன் தரத் தக்கதாக இருந்தால் மிகவும் வரவேற்கப்படும்.
2018 -19 ஆம் ஆண்டுக்கு மாநில அளவில் இரு கண்டுபிடிப்பாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். ஒரு கண்டுபிடிப்பாளருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கும். இவ்விண்ணப்பத்துடன் கண்டுபிடிப்பைப் பற்றி ஒரு பக்க அளவில் அறிமுகம், புகைப்படங்கள், கண்டுபிடிப்பைப் பற்றிய படக்காட்சிகளுடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் ஆக. 31ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தார்.