அறந்தாங்கி அருகே மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறப்பு

அறந்தாங்கி அருகே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் மூடப்பட்டு, நூலகம் ஆரம்பிக்க இருந்த நிலையில்

அறந்தாங்கி அருகே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் மூடப்பட்டு, நூலகம் ஆரம்பிக்க இருந்த நிலையில் 11 மாணவர்கள் சேர்க்கையால் செவ்வாய்க்கிழமை முதல் அந்த பள்ளி மீண்டும் செயல்பட துவங்கியது.
தமிழகம் முழுவதும் 45 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் அந்தப் பள்ளிகள் நூலகமாக மாற்றப்படும் என்றும், மாணவர் சேர்க்கை இருந்தால் மீண்டும் பள்ளி நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அண்மையில் அறிக்கை வெளியானது.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள சின்னப்பட்டமங்களம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியையும் நூலகமாக மாற்றலாம் என கடந்த 9ஆம் தேதி, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச்செல்வம், மாவட்ட நூலகத்திற்கு ஒப்படைவு கடிதம் அளித்தார். இந்நிலையில், கல்வி ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்கூட்டம் நடத்தி மீண்டும் தங்களுக்கு பள்ளி வேண்டும் என்றும், முதல்கட்டமாக 11 மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதாகவும் கல்வி அலுவலருக்கு கடிதம் அளித்தனர்.
அதன்பேரில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச்செல்வம், அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் தனித்தனியாக அழைத்து பேச்சு நடத்திய பின்னர் சென்னையில் உள்ள கல்வித்துறை உயர்அலுவலர்களிடம் பேசினர். அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, பள்ளி தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். அதேசமயம், ஆவுடையார்கோவிலை அடுத்த சின்னப்பட்டமங்களம் கிராமத்தில் மூடப்பட்ட பள்ளி, தற்போது நூலகமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அங்கும் கூடுதல் மாணவர்களை சேர்த்து, மீண்டும் பள்ளியை செயல்பட வைக்க ஊர் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com