ஆலங்குடியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆலங்குடி வட்டத்தில் ஆற்றுப்பாசனம் ஏதும் கிடையாது என்பதால் ஆழ்குழாய் கிணறை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலுக்கு பிறகு சுத்தமாக மழை பெய்யவில்லை. இதனால் குளங்கள், ஏரிகள் வறண்டு காணப்பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.