புதுக்கோ ட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் இளையோர் சுழற்சங்கம், நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் மாவட்ட சாலைப் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் உடல் உறுப்பு தான தினத்தையொட்டி சாலை விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அவசர மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் அண்ணாமலை பெரியண்ணன் இதில் கலந்து கொண்டு, எதிர்பாராத விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பொதுவாக, விபத்துகளின்போது உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி செய்யப்படாமல் போவதும், குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாததும் உயிரிழப்புக்கு காரணமாகின்றன என்பதை அவர் விளக்கினார்.
தொடர்ந்து விபத்துகளின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முறைகள் குறித்து செய்முறை விளக்கமளித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு இளையோர் சுழற்சங்க ஒருங்கிணைப்பாளர் கு. தயாநிதி தலைமை வகித்தார். சாலைப் பாதுகாப்பு சங்கத் தலைவர் கண. மோகன்ராஜ் வாழ்த்தி பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர். மணிமாறன் வரவேற்றார். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் சி. முத்துக்குமார் நன்றி கூறினார்.