கந்தர்வகோட்டையில் மின்கசிவால் தீப்பிடித்து கூரை வீடு எரிந்ததில் முதிய தம்பதியினர் செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தனர். கந்தர்வகோட்டை செட்டிசத்திரம் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(58). இவரது மனைவி சாவித்திரி(50). இவர்கள் இருந்த கூரை வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மின்கசிவால் தீப்பிடித்து எரிந்தது.
இதில் சாவித்திரி, ராஜேந்திரன் இருவரும் தீக்காயமடைந்து கூச்சலிட்டனர். அருகிலிருந்தவர்கள் கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு குழுவினர், முதிய தம்பதியினரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது.
பொன்னமராவதியில்... பொன்னமராவதி அருகே தீராத வயிற்றுவலியால் தீக்குளித்து படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பொன்னமராவதி அருகேயுள்ள காயாம்புஞ்சையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சிவஸ்ரீ (17), 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த சில வருடங்களாக தீராத வலிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு சிவஸ்ரீ தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.