நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று நிதி திரட்டி வருகிறார் ஆலங்குடியைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கணேசன்.
ஆலங்குடியை சேர்ந்தவர் எஸ். கணேசன்(69). 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது காரில் பணம் ஏதும் பெறாமல் இதுவரை சுமார் 5,500-க்கும் மேற்பட்ட சடலங்களை ஏற்றிச் சென்று இறுதிச்சடங்கு செய்ய உதவியுள்ளார். மேலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு இலவசமாக ஏற்றிச்சென்று உதவியுள்ளார்.
சுனாமி பாதிப்பு, தானே புயல், ஒக்கி புயல், சென்னை, கேரளா பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின்போது, நிவாரண பொருள்களையும், நிதியையும் திரட்டி உதவி செய்தவர்.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தனது காரில் ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மாங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை திரட்டி வருகிறார். மேலும், கடைகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி சேகரித்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு, நிவாரணப் பொருள்களை திரட்டியிருப்பதால், தற்போது நீலகிரி வெள்ளத்துக்காகவும் பொதுமக்கள் தன் மீது நம்பிக்கை தாரளமாக உதவி செய்கின்றனர் என்கிறார் கணேசன்.