அறந்தாங்கியில் வாகன உதிரிப்பாக கடையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வாகன உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின.
அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் புதுக்கோட்டையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஆயில், பெயிண்ட் உள்ளிட்ட உதிரிப் பாகங்கள் கடையை நடத்திவந்தார். புதன்கிழமை பூட்டிய கடையிலிருந்து புகை வருவதைப் பார்த்த பக்கத்து கடைக்காரர்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆயில் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. பின்னர் ஆவுடையார்கோவிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்து கடும் போராட்டத்திற்கு பிறகு சுமார் 2 மணிநேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது.
கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்ததில் சேத மதிப்பு ரூ. 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. பூட்டிய கடைக்குள் ஏற்பட்ட தீ விபத்து நாசவேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் அறந்தாங்கி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.